புதன், 26 ஆகஸ்ட், 2026

கலைகச்சொல்

 அறிவியல் எழுத்தாளர் சங்கரன் ரவிச்சந்திரனின் மொழிபெயர்ப்பிலுள்ள நல்ல கலைச்சொற்கள். 


துளிம ஈர்ப்பியல்(Quantum Gravity)

துளிமக் கூலங்கள் (Quantum Grains)

பொது சார்பு (General Relativity)

ஆப்பெழுத்து(Cuneiform)

தொடுவளை ( tangent) 

நுண்மை ( Granularity)

அறுதியின்மை (indeterminism)

சார்புடைமை (Relationality) 

அருநிகழ்வுநிலைகள் ( Singularities)

பூரண உடனிகழ்வு ( absolute simultaneity) 

துளிம இயக்கவியல் (Quantum Mechanics) 

உடன்மாறி துளிமப் புலங்கள் (covariant quantum fields)

கூடமைப்பின் தோராயமாக்கம் ( lattice approximation) 

முற்றான வியப்பின்மை ( complete absence of surprise)

பொது பிரபஞ்ச மாதிரி ( Standard Cosmological model )

காலவெளியிட தொடர் பொருண்மை ( spatiotemporal continuum )‌‌

நுண்தகவல் பரவல் ( Statistical distribution) 

கலாச்சார சார்பாளர் (‌Cultural Relativist)

முன்நோக்குநர்(Visionary)

நேர்க்காட்சி(empirical)

இழைக் கொள்கை (String Theory) 

துகள் முடுக்கி ( particle accelerator)

அதிசீர்மைத் துகள்(supersymmetric particle) 

நிலைமாறாமல் ( consistent) 

முற்றான வியப்பின்மை ( complete absence of surprise)

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

வாடிவாசல் சி.சு. செல்லப்பா

 

  • அறிமுகம் மற்றும் வாடிவாசலில் காரிக் காளையின் கம்பீரமான நுழைவு. காளையை அடக்க லங்கோட்டை இறுக்கிக்கொண்டு பிச்சி ஆயத்தமாவது.
  • கூட்டத்தின் திகைப்பும் எதிர்பார்ப்பும். ஜமீன்தாரின் சைகை மற்றும் கம்பீரமாக திட்டிவாசலில் காரி வந்து நிற்கும் காட்சி.
  • பிச்சி மற்றும் மருதனின் திட்டமிடல். பிச்சி காரிக் காளையின் திமிலைப் பிடித்துக் கழுத்தோடு தன் உடலை ஒட்டித் தழுவும் தத்ரூபமான போராட்டம்.
  • காளையை அடக்கி அதன் கொம்பிலிருந்த பட்டுத்துணியையும் (உருமாப் பட்டு) தங்கத்தையும் பிச்சி வென்றெடுத்தல். அவனது திறமையைக் கண்டு உசிலனூர் அம்பிலியின் பேரைக்காப்பாற்றியதற்காகக் கிழவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தல்.
வாடிபுரம் காளை!
வாடிவாசலையும் தொழுவத்தையும் பிரித்து நிற்கும் ஆள் உயர வேலி அடைப்பின்மீது உட்கார்ந்து இருந்த ஒரு பையன் கத்தினான்.
“வாடிபுரம் காளை!”
“கருப்புப் பிசாசு!”
கத்திய அத்தனை குரல்களிலும் ஒரு நடுக்கம், திகில் வெடித்துப் பரவியது. வாடிவாசல் அமர்க்களப்பட்டது. சில விநாடிகளில் வாடிவாசலை முண்டியடித்து எக்கி நின்ற கூட்டம் போன இடம் தெரியவில்லை. காரிக் கொம்புக்கு எட்டாதபடி எப்படிவெல்லாம் பாதுகாத்துக் கொள்வதென்று தவித்து அவனவன் அங்கும் இங்கும் ஓடிப் பதுங்கப் பார்த்தான். திட்டிவாசலைச் சுற்றிக் குழப்பமின்றி விஸ்தாரமாக இருந்தது. அதிமேலும் இரண்டொருத்தன் தான் துணிந்து நின்று காளை உள்ளே அவிழ்க்கப்படுவதைப் பார்த்தான்.
தொழுவத்தில் அதன் அலங்காரங்கள் கலைக்கப்பட்டு உள்வாடிக்குக் கொண்டுவரப்பட்ட காளை ஒரு தடவை முக்காலுமிட்டுவிட்டு ஒரு சிறுவன் பிடிகயிற்றுக்கு அடங்கிப் பரம சாதுவாக அடைப்புக்குள் ஆடி அசைந்து வந்தது.
“மருதா” என்று உஷார்படுத்திக் கொண்டு பிச்சி, லங்கோட்டை ஒரு தரம் இறுக்கிவிட்டு, வயிறை எக்கிக் கொடுத்து ஒரு முழு மூச்சு இழுத்தான். குனிந்து இரு கைகளையும் தரையில் தேய்த்து, பிடி வழுக்காமல் இருக்கச் சுரசுரப்பாக்கிக் கொண்டான்.
“கிழக்கத்தியான் காரியைப் பிடிக்கப் போறான்!”
“பேர் போனதுதான்!”
“செல்வமாய் வாடியிலே அவனுக்கு முடிவு போட்டிருக்கு!”
“குருத்துப் பையன், அநியாயமா...!”
“பட்டு உருமாவுக்கு ஆசைப்பட்டு உசிரை இந்தான்னு கொடுக்கிறானே பாவி!”
“இரண்டு பவுனுத் தங்கம் கண்ணை உறுத்துமுல்லே!”
ஆளுக்கொரு அபிப்பிராயமாகக் கூட்டம் பரிமாறிக் கொண்டது. மேடை ஆசனத்திலிருந்து முன்சாய்ந்து குறுக்குக் கம்பியின் மீது கை வைத்து ஆர்வத்துடன் பார்க்கும் போது அவர் பக்கமாகத் திரும்பிய பிச்சியின் பார்வையைக் ஜமீன்தார் சந்தித்துவிட்டார்.
“ஹூம், பிடி!” என்று சொல்வதுபோலத் தன்னை அறியாமலேயே தலையை ஆட்டி விட்டார்.
“பார்த்தியா, காளை வரவும் கிழக்கத்தியான் பம்மிட்டான்.”
“அவ்வளவுதான் பேர்!”
“சும்மா ஆர்ப்பாட்டக்காரனுங்க!”
தன்னைச் சுற்றி எழுந்த இந்தக் கேலி வார்த்தைகளைக் கேட்ட ஜமீன்தார், “உறையாமல் பார்த்துக் கிட்டிருங்க,” என்று சுருக்கெனச் சொல்லி அடக்கினார். “அவன் ஒரு பிறவி! எந்த மாட்டு சைசை எப்படி விழணும்னு அவனுக்குச் சுபாவத்திலேயே ஊறிக் கிடக்கும்!” கண்டன வாய்கள் மூடிக்கொண்டன.
திட்டி வாசலில் காரி ராஜாங்கமாக நின்றது. அதன் புடைத்த பளீரிடும் கருந்திமில் நெஞ்சுர மரக்கட்டை அடைப்புக்கு சமமாக எடுப்பாகத் துருத்திக்கொண்டு வாடிவாசலில் வந்து நின்றது.
“ராஜாளி மாதிரி வந்து நிக்குது பாரு!”
“நின்னுகுத்திக் காளையின்னா இதுதான்!”
“இதைவா கிழக்கத்தியான் பிடிக்கப் போறான்!”
நின்ற காரி, வாடிவாசலில் தன் மீது கை போடும்படி சவால் விட்ட மாதிரி இருந்தது. அதன் மூச்சு தரையில் பட்ட இடங்களில் மணல் சிதறிப் பறந்தது. ஒருதரம் வெறிக்கடித்தது. மறுபடியும் தரையை முகர்ந்துகொண்டிருந்தது.
‘அப்பன் ஆசைக்கு மட்டுமின்றி உசுருக்கு உடை வைத்த காரி, அதன் கொம்பில் இன்னும் அப்பன் இரத்தம் வழிந்து கொண்டிருப்பது’ போன்ற பிரமை ஏற்பட, அவனுக்கு நேர் எதிரில் வந்து நின்ற போது அந்தக் கிழக்கத்திய வாலிபனான பிச்சி, அதன் கொம்புக்கு நேராகவும் மருதன் அதன் வால் பக்கமாகவும் அசையாமல் நின்றார்கள். பிச்சியின் முகத்தையே சைகைக்கு எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் மருதன். காளைக்கு சமமாகப் பார்த்துப் பிச்சி மருதனுக்குச் சைகை செய்ததுதான் தாமதம்...
“டுர்ரீ!”
மருதன் குரல் வாடிவாசல் முணுமுணுப்பைக் கிழித்துக் கொண்டு எழுந்தது. கூவிக் கொண்டே முன் வந்த காளையின் வாடை ஜாடையாகத் தொட்டுவிட்டு வட்ட விளிம்பாரமாகப் பின்னரித்தான். மருதன் கைபடவும் காளை அவன் மீது பாய, வடக்கெனத் திரும்பியது. அது பிச்சியே விட்டுவிட்டு ஒரு சிறு கோண அளவுக்குத் திரும்பி இருக்கும்.
சில்வண்டு மாதிரி அட்டத்திலிருந்து பாய்ந்து அதன் திமிலில் இடது கையைப்போட்டு நெஞ்சோடு நெருக்கி அணைத்துத் கழுத்தோடு தன் உடலை ஒட்டிக்கொண்டு அதன் வலதுகொம்பில் கை போட்டான் பிச்சி.
எதிர்பாராத இந்தப் பாய்ச்சல் காளைக்கு எடுத்த எடுப்பில் பிந்திவிட்ட பாதகமாகப் போய்விட்டது. ஆனாலும் அதனுடைய சுபாவமான மிருக குணம் மறுகணத்தில் சமாளிப்பைக் கொடுத்தது. முழு வேகத்துடன் கொம்பை அசைத்துப் பிச்சியப் பின்னால் குத்தப் பார்த்தது. காளையின் தலை, கீழ்நோக்கி அழுத்தப்படவே காளை உத்தியை மாற்றி ஒரு எகிறு எகிறி நான்கு கால்களையும் உயரே தூக்கித் தவ்வியது. பிச்சியும் அதோடு உயரே போனான்.
“அட! விராலு மாதிரித் துள்ளுதுடா!”
“குதிரை கணக்கா எறியப் பாக்குது!”
“தோத்தான்டா பேர் ஊட்டி திருகி விழுந்து!”
“தூக்கிப் போட்டுப் பட்டையுரிச்சிடப் போகுது!”
மருதன் கத்தினான். “பிடியை விட்டுடாதே, பிச்சி!”
ஆள் உயரத்துக்கு மேல் எழும்பிய காளை அந்தரத்தில் முதுகு குவிந்து தலை உள்ளடக்கிக் கால்களைத் தரையில் அடித்துக் கொண்டு கீழே இறங்கியது. பிச்சியும் பிடி விடாமல் கூடவே இறங்கி, கால்களைத் தரையில் பதித்து நிலைக்கத் துளாவினான். ஆனால், அவன் நிலைக்கு முன்பே மறுபடியும் காளை எம்பித் தவ்வி விட்டது.
“பிடியை விட்டுடாதே! விட்டுடாதே!” கூட்டத்திலிருந்து பதறி ஆர்ப்பரித்த கத்தல்கள்.
“ஒரு தவ்வுக்கு நின்றுட்டானடா!”
“இரண்டாவது தவ்வுல உருட்டிரும்!”
“கிழக்கத்தியான் கை அந்தாவே தொங்குதுடா!”
“ஓ! இரண்டு தவ்வுக்கு நின்றுட்டான்!”
“வாடிபுரம் காளை பிடிபட்டுப் போச்சு!”
“பிச்சி, பிச்சி! விட்டுடாதே, இந்த ஒரு தவ்வுதான்!”
“காளையும் வேடைக் குதுதடாய்! மூன்றாவது எம்புற உரமில்லை!”
ஒரு தவ்வு, இரண்டு தவ்வு, மூன்றாவது தவ்வுக்கும் அவன் நின்றுவிட்டான். மூன்று தடவையும் காளை அவனை உருட்டி எறிந்து கிழித்திருக்க வேண்டும்.
இந்த நாடகத்தின் கடைசி அங்கம் இருக்கிறது என்பது தெரிந்தும் அடக்க முடியாத களிவெறி கொண்ட கூட்டம் எம்பி எம்பிக் குதித்துக் கத்தியது.
“வாடிபுரம் காளை வாய் பிளந்துடுச்சுடா!”
“கிழக்கத்தியான் வென்றெடுத்துட்டான்!”
பிச்சி, காளையின் நெற்றித் திட்டில் கை போட்டு, கொம்புக்குக் கொம்பு மாறி மாறிச் சுற்றியிருந்த உருமாப் பட்டட்டைக்கு அடியில் கை கொடுத்து ஒரு இழு இழுத்தான். மெடல், அலங்காரச் சிறு தங்க ஜெகடுகள் கோர்த்திருந்த சங்கிலியுடன் பட்டுத்துணி அவன் கைக்குத் கொத்தோடு வந்துவிட்டது. அப்படியே வாயில் கவ்விக் கொண்டான். தரையில் பதித்த கால்களை அழுத்தித் திமிலைச் சேர்த்து, காளையை ஒரு தம் கொடுத்து எதிர்ப்பக்கமாகத் தள்ளிவிட்டு எகிறிப் பின்னால் பாய்ந்தான்.
ஆர்ப்பரித்த வாடிபுரம் கூட்டத்துக்குள் நெக்கி வரமுடியாமல் திணறி, பிச்சியே பார்க்கத் தவித்துக் கொண்டிருந்த கிழவன், “இந்தா மவனே” என்று உணர்ச்சிப் பெருக்கால் பிச்சியே பார்த்து, “உசிலனூர் அம்பிலியின் பேரைக்காப்பாத்திட்டடா. நீ மனுஷனுக்குப் பொறக்கலைடா, புலிக்குப் பொறந்த பேர்! சிவறத்தைச் சொல்றது!” என்று உருமாப் பட்டட்டையை நீட்ட, பிச்சியின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

ஆசிரியர் குறிப்பு (About the Author)
சி.சு. செல்லப்பா (1901 - 1998): இவர் சிறுகதை, புதினம், விமர்சனம், கவிதை, மொழிபெயர்ப்பு எனத் தமிழ் இலக்கியத்தின் பல துறைகளிலும் பங்காற்றியுள்ளார். நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 'எழுத்து' இதழினைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியவர். இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் 'வாடிவாசல்', 'சுதந்திர தாகம்', மற்றும் 'ஜீவனாம்சம்' ஆகியவை அடங்கும். இவரது பிரசித்தி பெற்ற 'சுதந்திர தாகம்' புதினத்திற்கு 2001-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.